Saturday, May 21, 2011

   
                                
பாபா ராம்தேவின் நாடகம்!

 "என் வாழ்க்கையில் இதுவரை இப்படியொரு வன்முறையை நான் பார்த்ததேயில்லை" என ராம்லீலா மைதானத்தில் நடந்த சம்பவத்தைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் யோகா குரு பாபா ராம்தேவ். யோகா வகுப்பு நடத்தவும், மாலை 6 மணிக்குள்ளாக அனைவரும் கலைந்துச் சென்று விடுவோமென்றும் காவல் துறையிடம் அனுமதி வாங்கினார் பாபா. ஆனால், ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதம் என ஊடகங்களுக்குக் கூறினார். இதனால் அங்கு கூடி வந்த கூட்டத்தைப் பார்த்து தனது முடிவை மாற்றி களைந்து போக மருத்துவிட்டார் பாபா. 
 இதனால் வேறுவழி இல்லாமல் மத்திய அரசு காவல் துறையை ஏவி கூட்டத்தைக் கலைத்தது. வெறும் 2000 பழங்குடியினரை கலைப்பதர்க்கெல்லாம் துப்பாக்கிச் சூடு நடத்தி பொதுமக்களை கொள்ளும் காவல் துறை ராம்லீலா மைதானத்தில் கையாண்டவிதம் மென்மையானதே. இதற்கே பாபா, 'இப்படியொரு வன்முறையைப் பார்த்ததில்லை' என கூறுகிறார் என்றால் அவர் (பாபா) இத்தனை நாள் மிகவும் பாதுகாப்பான, சொகுசான வாழ்க்கையையே வாழ்ந்து வந்திருக்கிறார் என்று பொருளாகிறது. 
   "ஊழலை ஒழிப்பதற்கு உருவாக்கப்படும் லோக்பால் அமைப்பு பிரதமரையும், இந்திய தலைமை நீதிபதியையும் விசாரிக்கக் கூடாது" என்று கூறியவரே இந்த ராம்தேவ்தான். அன்னா ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மாற்றாக மத்திய அரசாங்கத்தால் உருவாகப்பட்டவராககூட பாபா ராம்தேவ் இருக்கலாம்!.
 கறுப்புப் பணம் வெளிக்கொண்டுவரப்பட வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை, அதேவேளை அதற்காக பாபாவின் போராட்டத்தை ஊக்குவிக்க வேண்டுமா? அவர் கூறும் கோரிக்கைகள்தான் என்ன?
  •  ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டுமென கோருகிறார். கொலை செய்த குற்றவாளிகளுக்கே மரண தண்டனை கொடுக்கக் கூடாதென பலர் கூறிவரும் வேளையில் ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை என்பது இந்தியாவில் நடக்காத காரியம்!.
  • 500, 1000 ஆகிய ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக்கிவிட வேண்டுமெனவும் கூறுகிறார். இந்த நோட்டுகளை ஊழல் பெரிச்சாளிகள் மட்டுமா வைத்துள்ளார்கள்? சாதாரண உழைத்து உண்பவர்கள்கூடதான் வைத்துள்ளார்கள். எனவே இதுவும் வேலைக்கு ஆகாத கோரிக்கை!.
  • ஜனநாயக இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாக்கத்தின் அடயாளங்கள் அளிக்கப்பட வேண்டுமென்கிறார். அதாவது ஆங்கிலத்தில் நடக்கும் நிர்வாகம், கல்வி எல்லாம் நிறுத்தப்பட வேண்டுமாம். ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தில் தீர்வு காணும் எளிமையான பிரச்சனை அல்ல, மக்களிடையே விவாதம் நடத்தப்பட வேண்டிய பெரிய விஷயம் இது. ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு எல்லா இடங்களிலும் இந்தியைக் கொண்டு வரும் முயற்சி என்பதே இதன் பொருள். இது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிவாசிகளுக்கு எதிரானது. எனவே இந்தக் கோரிக்கையும் செல்லுபடியாகாது!. 
  • அடுத்து மிகவும் முக்கிய கோரிக்கையை அவர் வைக்கிறார். அது இந்திய பிரதமர் நேரடியாக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்கிறார். அதாவது நாடாளுமன்ற ஜனநாயகம், பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆகியவை பாபாவுக்கு வேம்பாகக் கசக்கிறது போலும்! அந்தந்த மாநில உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ராம்தேவ்கள் போன்றோரின் சில திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குப் பதிலாக அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரும் விருப்பத்தைத் தெரிவிக்கிறார் பாபா! ஆக இந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப் படவேண்டியதுதான்!. 
   இந்தக் கோரிக்கைகளை எல்லாம் பெரிதாக ஊடகங்கள் விவாதிக்காமல், காவல் துரையின் அத்துமீறல்களை மட்டுமே சுட்டிக்காட்டி பரபரப்பை ஊட்டுகின்றன. இவருக்குப் பின்னால் உள்ள ஜனநாயக விரோதமான கோரிக்கைகளை அம்பலப்படுத்தத் தவறுகின்றன. மேலோட்டமாக ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்று சொல்லப்படும்போது, அதற்கு ஆதரவு அளிப்பது கடமை அன்று தோன்றுகிறது. இதனைத் தவிர்த்துப் பார்க்கும்போது இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்ற எண்ணமே மேலோங்குகிறது!.
   மேலும், பாபா ராதேவ் உண்ணாவிரத நாடகத்தை 9 நாள் கழித்து இன்று முடிதுக்கொண்டிருக்கிறார். கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தேராடவுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மற்றொரு ஆன்மீகவாதியான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டதாகவும் செய்திகளும், படங்களும் ஊடகங்களில் வெளிவந்து இருக்கின்றன.
   பாபா உண்ணாவிரதம் இருந்தபோது ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், பி.ஜே.பி. ஆட்களுமே அதிகம் வந்து பாபாவுக்கு ஆதரவளித்தனர். ஆக பாபா ராம்தேவை பின்னாலிருந்து இயக்குவதே ஹிந்துத்துவா சக்திகள்தான் என்று ஒரு சந்தேக எண்ணம் தோன்றுகிறது.
   எது எப்படியோ, பாபாக்களும், ஹசாரேக்களும் ஊடகங்களை பயன்படுத்தி தங்களுக்குப் புகழ் சேர்த்துக்கொண்டு, மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்பதே நிஜம்!.
                                                                                                                              - உமர் முக்தார்,                         
                                                                                 செய்தியாளர், வின் தொலைகாட்சி

No comments:

Post a Comment